

தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது தென்ஆப்பிரிக்காவில் விராட் கோலியின் ஆக்ரோஷம் கொஞ்சம் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடரின்போது நான் விராட் கோலியை பார்த்தேன். அவரது ஆக்ரோஷம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக உணர்கிறேன். ஆனால், கேப்டன் பதவியில் கற்றுக் கொண்டுள்ளார்.
தன்னை ஒரு கேப்டனாக இன்னும் மேம்படுத்திக் கொண்டு வருகிறார். சில நேரங்களில் சந்தோசமான காரணிகள், எமோசன் அவரை இழுக்கிறது. இருந்தாலும், அவர் வழியில் அவர் விளையாடுகிறார்.
எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை விரும்பிய விதத்தில் விளையாட முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ரகானே மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் மிகவும் அமைதியானவர்கள். ஆனால் சிறப்பான வீரர்கள். ஆகவே, சில வீரர்கள் மாறுபட்டவர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக்ரோஷத்தை சில நேரங்களில் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் குறைவாக வெளிப்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் எது சரியானது என்பதை அறிந்துக் கொள்வது தேவையானது.
அணியை வழி நடத்திச் செல்லும் முறை தற்போது மிகவும் சரியாக உள்ளது. கவர்ச்சிகரனமான வீரராகவும், முக்கிய காரணியாகவும் உள்ளார். இதனால் அணியின் மற்ற வீரர்களும் அவரை பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். எந்த நேரத்திலும் அணி நேர்மறையான சிந்தனையுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்.