

குழித்துறை:
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று குழித்துறை சந்திப்பில் காங்கிரசார் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
மறியல் போராட்டத்தில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வான விஜயதரணி உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர். அவர்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தால் குழித்துறை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews