கடைகள், ஓட்டல்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும்- விக்கிரமராஜா கோரிக்கை

கடைகள், ஓட்டல்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிரமராஜா
விக்கிரமராஜா
Published on

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் ஆர்.ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, கொரோனாவால் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். கடைகள், உணவகங்கள் திறப்பு நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்-அமைச்சரிடம் அவர்கள் வழங்கினர்.

இதுதொடர்பாக ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், “எங்களது கோரிக்கைகள் மீது உரிய தீர்வுகள் எட்டப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். பொதுநலன் கருதி தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளை வணிகர்களும், பொதுமக்களும் தவறாக பயன்படுத்திவிடாமல், மார்க்கெட், கடைகளுக்கு செல்லும் போது மற்றவர்களிடம் இருந்து தங்கள் இன்னுயிரை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com