

புதுடெல்லி:
ஹாக்கி போட்டிகளில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக திகழ்ந்த தயான் சந்த்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய விளையாட்டுதுறை மந்திரி விஜய்கோயல் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்த தயான் சந்த், 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தனது மட்டையால் பந்தை லாவகமாக, மந்திரம் செய்து கடத்தியது போல கோல் போடுவது இவரது ஸ்டைல்.
‘தி விசார்ட்’ என்று அழைக்கப்பட்ட தயான் சந்த் 1979-ம் ஆண்டில் மரணமடைந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாரத ரத்னா விருது பெறுவதற்கான தகுதி துறைகளில் விளையாட்டு சேர்க்கப்பட்டது. ஆனால், அப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்க்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அப்போது முதலே ஹாக்கி வீரர் தயான் சந்த்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், இது குறித்த கோரிக்கையினை பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.