மதுரை:
திருமாவளவன் குறித்து இந்து முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் திருப்பூர் கோபிநாத் கூறிய கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கண்டித்து இன்று அவர்கள் பஸ் மறியலிலும் ஈடுபட்டனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கதிரவன் தலைமையில் 120 பேர் கலந்து கொண்டனர். அவர் களை திடீர்நகர் போலீசார் கைது செய்தனர்.
தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு மாநில வக்கீல் அணி துணை செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, சிக்கந்தர்சாவடி யில் மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழாளன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. நிர்வாகிகள் அரசு, ஜெயக்குமார், அருள், விடுதலைவீரன், வளவன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.