

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.
மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி. நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.