

சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபால்கிருஷ்ண காந்தி பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்நிலையில், தன்னை ஆதரிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆதரவு கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமக்கு ஆதரவு நல்கிய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு பாமக ஆதரவு அளித்துள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோபாலகிருஷ்ண காந்தியிடம் ஆதரவு அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.