

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்பால் ரெட்டி இன்று ஐதராபாத் நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.
சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு உயிரிழந்தார்.
உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த ஜெய்பால் ரெட்டி அதன்பின் அரசியலில் குதித்து 1970-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
பாராளுமன்ற தேர்தலில் 5 முறை வெற்றி பெற்று எம்பி. ஆனார். பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக 2 முறை தேர்வு செய்யப்பட்டார். 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐதராபாத் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெய்பால் ரெட்டியின் உடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.