

வேப்பூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியை சேர்ந்தவர் சேகர் (வயது 49). கார் டிரைவர். இவர் தனக்கு சொந்தமான காரில் சேலத்துக்கு சென்றார்.
அங்கிருந்து புவனகிரியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 39), ஜெயந்தி (42), பாலாஜி (21), அருண்மொழி (21), குணசீலன் (25), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோருடன் காரில் புவனகிரிக்கு புறப்பட்டார். காரை சேகர் ஓட்டிவந்தார்.
நேற்று நள்ளிரவு சேலம்-கடலூர் சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சேகரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் காரை ஓட்டி வந்த சேகர் மற்றும் காரில் வந்த சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காரின் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயந்தி, பாலாஜி, வெங்கடேசன், அருண் மொழி, குணசீலன் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.