ஊத்தங்கரை அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாய் தகராறில் லாரி டிரைவரை மற்றொரு டிரைவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை
Published on

ஊத்தங்கரை:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர். லாரி டிரைவரான இவர் வேலூரில் இருந்து லாரி லோடு ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதவனி பகுதி அருகே வரும் போது எதிரே வந்த மற்றொரு லாரி பக்கவாட்டில் உரசியது.

இது பற்றி பன்னீர் உரசிய லாரி டிரைவரான வேலூரை சேர்ந்த சந்துருவிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்துரு லாரியில் இருந்து கத்தியை எடுத்து பன்னீரை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பன்னீரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com