முன்நிபந்தனைகள் எதுவும் இன்றி வடகொரியாவுடன் அமெரிக்கா பேச தயார்: டில்லர்சன் தகவல்

அணு ஆயுத குறைப்பு தொடர்பாக முன்நிபந்தனைகள் எதுவும் இன்றி வடகொரியாவுடன் அமெரிக்கா பேச தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி டில்லர்சன் தெரிவித்தார்.
முன்நிபந்தனைகள் எதுவும் இன்றி வடகொரியாவுடன் அமெரிக்கா பேச தயார்: டில்லர்சன் தகவல்
Published on

வாஷிங்டன்:

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வடகொரியாவை அமெரிக்கா கண்டித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. பின்னர் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது.

அதேசமயம் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது என்றும், அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு வடகொரியா அரசு தயாராக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியிருந்தார்.

இந்த மோதல் போக்கு ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனைகளை கடந்த நவம்பர் மாதம் வடகொரியா பரிசோதனை செய்தது. உலகின் வலுவான அணுசக்தி நாடாக வடகொரியாவை மாற்றுவோம் என்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பேசினார்.

இந்நிலையில், அணு ஆயுத குறைப்பு தொடர்பாக வடகொரியாவுடன் முன்நிபந்தனைகள் இன்றி பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கை சவால்கள் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய டில்லர்சன், ‘வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச தயாராக இருப்பதாக தூதரகம் மூலம் தெரிவித்திருக்கிறோம். எந்த முன் நிபந்தனையும் இன்றி முதல் சந்திப்பை நடத்த தயாராக இருக்கிறோம். இது வெறும் சந்திப்பு மட்டும் தான். அதன்பின்னர், பேச்சுவார்த்தைக்கான பணிகளை தொடங்குவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com