

நியூயார்க்:
அமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்திருப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா தாக்குதல் காரணமாக சான் பிரான்சிஸ்கோ நகரில் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் பயணிகள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
2,400 பயணிகள் மற்றும் 1,100 ஊழியர்களுடன் வந்த இந்த கப்பலில் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) கலிபோர்னியாவின் ஓக்லாந்து நகரில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் கப்பலில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.