உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இடைத்தேர்தலில் போட்டி
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யநாத் முதல்- மந்திரியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்.
யோகி ஆதித்யநாத் தற்போது எம்.பி.யாக உள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5-வது முறையாக எம்.பி.யாக தேர்வு பெற்றார்.
முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக 6 மாதத்திற்குள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதனால் அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. அதன்பிறகு அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜனதா மூத்த தலைவர் தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக மேல்- சபை உறுப்பினராகலாம். ஆனால் அவர் அதை விரும்பாமல் மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெறவே விரும்புகிறார்.
முன்னாள் முதல்-மந்திரிகளான மாயாவதி (2007-2012), அகிலேஷ் யாதவ் (2012-2017) ஆகியோர் மேல்-சபை மூலம்தான் உத்தரபிரதேச சட்டசபைக்கு நுழைந்து இருந்தனர். யோகி ஆதித்யநாத் அப்படி உறுப்பினராகாமல் தேர்தலில் நின்று உறுப்பினராகவே விரும்புகிறார்.
அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியான கேசவ்பிரசாத் மவுரியாவும் எம்.பி.யாக உள்ளார். பெல்பூர் தொகுதியில் இருந்து அவர் தேர்வானார்.

