

மியான்மரில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து தங்கியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் தரவுகளின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஐ.நா. அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஐநா அகதிகள் முகமையின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “அடைக்கலம் கேட்டுள்ள ரோகிங்கியா முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் இப்போது நாடு கடத்தப்பட்டிருப்பதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.