2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது

2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது
Published on

அங்காரா:

துருக்கி நாட்டில் அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சி, பொதுமக்களின் ஆதரவுடன் அதிபரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் கொண்டு வந்தார். இது அங்கு 2 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது.

நெருக்கடி நிலையின்போது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு உடையவர்கள் என்று கருதி பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்; பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் எர்டோகன் அமோக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும், அந்த நாடு அதிபர் ஆட்சி முறைக்கும் மாறி உள்ளது.

அதிபர் தேர்தலில் அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தங்களது வேட்பாளர் வென்றால் நாட்டில் நெருக்கடி நிலை உடனே அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தன.

இந்த நிலையில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் அங்கு நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார். இருந்தபோதிலும், அங்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com