

நாகமலைபுதுக்கோட்டை:
மதுரை வடபழஞ்சி அருகே உள்ள கே.மீனாட்சிபட்டியை சேர்ந்தவர் பிச்சை (வயது 45). இவர் நேற்று காலை வடபழஞ்சியில் இருந்து மதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகன் காசி(17) யுடன் சென்றார். அப்போது காமராஜர் பல்கலைக்கழகம் அருகே சென்றபோது அந்த வழியாக மதுரையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பிச்சை சம்பவ இடத்திலேயே பலியானார். காசிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் காசியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான உசிலம்பட்டி தாலுகா ரெங்கசாமிபட்டியை சேர்ந்த சந்திரன்(வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர்.