

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைதானார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.