

பாக்தாத்:
ஈராக் நாட்டின் கிர்குக் நகரம் எண்ணெய் வளம் அதிகம் நிறைந்த பகுதியாகும். குர்திஷ் அமைப்பினர் குறைந்த அளவிலேயே வசிக்கும் இந்த பகுதியில், நாட்டின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக குர்திஷ் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிர்குக் நகரில் இயங்கிவரும் மதுக்கடையை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கார் வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சுமார் பத்து பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்திவைக்கபட்டிருந்த வாகனங்களும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது.
குர்திஷ் அமைப்பினரின் வாக்கெடுப்பை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.