

பெங்களூரு:
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கணவர் நடராஜனை பார்க்க கடந்த மாதம் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இன்று பிற்பகல் சிறைக்கு சென்று சசிகலாவை தினகரன் சந்தித்தார். அவருடன் அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் இறுதி கட்ட விசாரணை நடத்த உள்ள நிலையில் சசிகலாவை தினகரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.