அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்: ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை

அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம்: ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை
Published on

சென்னை:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கு சாதகமான வாய்ப்புகள் நெருங்கி விட்டதால் ஒரு சில நாட்களில் இணைப்பு உறுதியாகி விடும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூருக்கு சென்று நேற்று சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.

பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், சுப்பிரமணியம், சுந்தர்ராஜ் ஆகியோரிடம் ஒரு சில மணி நேரம் தினகரன் பேசிக்கொண்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பால் ஓ.பி.எஸ். அணியும் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? ஆட்சியை இரு அணிகளும் கைப்பற்றக்கூடிய நிலையை தொடர்ந்து கட்சியையும் கைப்பற்றினால் அவற்றை தடுக்க என்ன வழிமுறைகளை கையாள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது? அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளவும் அதற்கான நடவடிக்கையில் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது.

23-ந்தேதி ஆர்.கே.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி அதன் மூலம் தனது செல்வாக்கை மேலும் உயர்த்தவும் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் ஏற்பாட்டில் கொருக்குப்பேட்டையில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வடசென்னை பொதுக்கூட்டம் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க தினகரன் முடிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com