

வேலூரில் நடந்த ஒரு திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் வயல்கள் காய்ந்து போய் உள்ளன. எனவே மத்திய அரசு தலையிட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக முதல் - அமைச்சரும், துணை முதல் - அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி அதில் பெரும்பான்மையானவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தான் நான் முதல் - அமைச்சர் ஆவேன்.
வருங்காலத்தில் எங்களது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். இந்த ஆட்சி போக வேண்டும் என்பதற்காக தான் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்தனர். இப்போது என்னைப்பற்றி அவதூறு பேசுகின்ற அமைச்சர்கள், வரும் தேர்தலில் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் டெபாசிட் கூட பெற மாட்டார்கள்.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ளாத அளவிற்கு ஜெயலலிதா ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல.