அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் இந்திய பாரம்பரிய முறையில் வணக்கம் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர்
Published on

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விருந்தினர்களை கண்டால் கை குலுக்கவும், கட்டித்தழுவவும், முத்தமிடவும் வேண்டாம் என உலக நாடுகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் மக்களின் கலாசார, உபசரிப்பு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. சில நாடுகளில் கை குலுக்குவதற்கு பதிலாக கால்களை தட்டியும், முழங்கைகளை இடித்தும் உபசரிக்கின்றனர்.

ஆனால் இதன் மூலமும் நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ஒவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் இந்திய பாரம்பரிய முறையில் வணக்கம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் பேசும்போது, “நாங்கள் இன்று கைகுலுக்கவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தோம் என்ன செய்யப் போகிறோம் என்று, அது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து வந்தேன். நான் அங்கு யாருக்கும் கை கொடுக்கவில்லை. அது மிகவும் எளிதானது. ஏனென்றால் அவர்கள் இவ்வாறு வணக்கம் தெரிவித்துத்தான் பழகி இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர் இந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு கை குலுக்‌குவதற்கு பதிலாக கை கூப்பி வணங்குவதை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கரரின் தந்தை ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com