பட்டாசு விற்பனை தடையை கிண்டல் செய்த திரிபுரா கவர்னர்

பட்டாசு விற்பனை தடைக்கு காரணமான சுற்றுச்சூழல் ஆர்வலர்களை திரிபுரா மாநில கவர்னர் கிண்டல் செய்துள்ளார். ‘நாளை, சுடுகாட்டை மூடவும் வழக்கு போடுவார்கள்’ என்று அவர் கூறினார்.
பட்டாசு விற்பனை தடையை கிண்டல் செய்த திரிபுரா கவர்னர்
Published on

அகர்தலா:

தீபாவளியை முன்னிட்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது, காற்று மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக, இந்த தடை விதிக்கப்படுவதாக கூறியது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இதனால், டெல்லியில் பட்டாசு கடை வைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடிக்கணக்கில் பட்டாசுகளை வாங்கிய நிலையில், அவற்றை விற்க முடியாமல், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குமுறினர்.

இந்நிலையில், பட்டாசு விற்பனை தடைக்கு காரணமான சுற்றுச்சூழல் ஆர்வலர்களை திரிபுரா மாநில கவர்னர் தத்தகதா ராய் நேற்று கிண்டல் செய்தார்.

‘நேற்று, உறியடி திருவிழாவுக்கு தடை கேட்டார்கள். இன்று, பட்டாசு தடைக்கு காரணமாகி விட்டார்கள். நாளை, இந்த கும்பல் இந்துக்களின் சுடுகாட்டை மூட வேண்டும் என்று கூட பொதுநல மனு தாக்கல் செய்வார்கள்’ என்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, குடியிருப்பு பகுதிகளில், பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com