

சென்னை:
தென்காசியை சேர்ந்தவர் புகாரி. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இவர் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தடாரகீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுலைமான், ரசூல் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதன் படி சுலைமானும், ரசூலும் கையெழுத்து போட்டு வந்தனர்.
கடந்த 5-ந்தேதி அன்று காலையில் ரசூல் கையெழுத்து போட்டு விட்டு சென்றார். அப்போது அவர் நண்பரான சுலைமான் கையெழுத்தையும் போலியாக போட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 2 எழுத்தர்களை ஏமாற்றி ரசூல் கையெழுத்து போட்டது கண்டு பிடிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் இதனை உறுதி செய்தன.
சுலைமான் கடந்த 5-ந்தேதி வெளியில் சென்றிருந்ததால் அவருக்கு பதில் ரசூல் கையெழுத்து போட்டதும் அம்பலமானது.
இதனை தொடர்ந்து ஆள் மாறாட்டம் செய்து போலி கையெழுத்து போட்ட குற்றச்சாட்டின் பேரில் ரசூல் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். #Tamilnews