அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை: திருச்சி சிவா எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை: திருச்சி சிவா எம்.பி. பேட்டி
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. நேற்று ஓசூர் வந்தார். முன்னதாக, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சுகாதார பணிகளை முடுக்கி விடவும், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசை வலியுறுத்தி, சீரிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட வரைவுகளுக்கும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். தி.மு.க. சார்பில், மு.க.ஸ்டாலின் நீட் பிரச்சினை குறித்து பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார், நானும் பிரதமரை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினேன். தமிழக அரசு சார்பில், சுகாதார துறை அமைச்சரை மட்டுமே சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கு முன், மத்திய சுகாதார துறை அமைச்சரும், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவிக்க வேண்டும், ஆக இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தியும், ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெரும் கடமையிலிருந்தும் தமிழக அரசு தவறி விட்டது.

இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு பாழாக்கி விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில், எதிர்கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். ஆனால் தமிழக அரசு சார்பில் முனைப்பும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி. தினகரன் பெயர் முதல் குற்றப்பத்திரிக்கையில் இல்லை என்பது போன்ற அனுமானத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது.

இதுபோன்ற பிரச்சினைகளில் நாள்பட, நாள்பட உண்மைகள் வெளியில் தெரியவரும். பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், டி.ஐ.ஜி குற்றம் சாட்டியுள்ளார். டி.ஜி.பி. அதனை மறுத்துள்ளார், கர்நாடக முதலமைச்சர், மாநில அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை, தி.மு.க. வரவேற்கிறது. விசாரணையின் அடிப்படையில் உண்மைகள் தெரிய வரும்.

ஜி.எஸ்.டி.வரிவிதிப்பில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. மக்களுக்கு பாதகமில்லாத வகையில், துன்பப்படுத்தாத வகையில் வரிகளை விதிக்க வேண்டும். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவர்கள் இருவரும் அனுபவம் மிக்கவர்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்,

தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச உரிமை மறுக்கப்படுகிறது. மீறி பேசினால் அவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. இந்த ஆட்சி, கடமையிலிருந்து தவறி வருகிறது. மக்கள் நலனுக்காக இந்த அரசு பணியாற்றவில்லை. இது மக்களுக்கான ஆட்சியல்ல.

இந்த அரசுக்கு மக்கள் நலனில் சிறிது கூட அக்கறை இல்லை. விரைவில் இதற்கு விடிவு பிறக்கும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு திருச்சி சிவா நிருபர்களிடம் கூறினார்.

பேட்டியின்போது, முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ. வெங்கடசாமி, ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், நகர பொருளாளர் சென்னீரப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com