

டெல்லியை தலைமையாக கொண்டு செயல்படும் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம், நாட்டிலேயே மிக அதிகமாக 30 லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் உள்ளது.
இம்மையத்தில், முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக பட்டம் படிப்பவர்கள் என இந்த பல்கலைக்கழகம் பல பேரின் வாழ்வில் ஒளியை ஏற்றி வருகிறது.
இந்நிலையில், கல்வி பயில உரிய வசதி இல்லாத திருநங்கைகள் எந்த வித கட்டணமும் இல்லாமல் அனைத்து விதமான படிப்புகளையும் தேர்ந்தெடுத்து, முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இம்மாதம் இறுதிவரை புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்கும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டையை விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க
வேண்டும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டது. இதன் மூலம், விண்ணப்பங்களில் ஆண், பெண் தவிர்த்து இதர பாலினம் என்று மூன்றாவது தேர்வுமுறை அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.