

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 489 படகுகளில் சுமார் இரண்டாயிரம் மீனவர்கள் நேற்று மாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இன்று காலை அவ்வழியாக இயந்திரப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்து திரும்பி செல்லும்படி கற்களைவீசி தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் கிழித்து நாசப்படுத்தினர்
இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து கரைக்கு திரும்பி வந்துவிட்டனர். தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடந்து வருவதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என ராமேஸ்வரம் மாவட்ட மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளனர்.
கடந்த 7-ம் தேதியும் இதேபோல் 800-க்கு மேற்பட்ட படகுகளில் சென்ற சுமார் 4 ஆயிரம் மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர் அவர்கள் கொண்டு சென்ற மீன்பிடி வலைகளை பறித்துக் கொண்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதேபோல், கடந்த 9-ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 650 படகுகளில் 3500-க்கு மேற்பட்ட மீனவர்களை தாக்கி அடித்து விரட்டியதுடன், சில படகுகளை சேதப்படுத்தி, சுமார் 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் நாசப்படுத்தினர் என்பது நினைவிருக்கலாம். #TNfishermen #Srilankannavy #tamilnews