

சென்னை:
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என கூறியதாலும், ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பலியான மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
என முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.