

சென்னை:
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று 315 மையங்களில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், குளறுபடிகள் காரணமாக பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடியால் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வராததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
இதேபோல் குளறுபடிகள் காரணமாக, அருப்புக்கோட்டை, பழனி, பொன்னமராவதி, செங்கம், பூந்தமல்லி, விருத்தாசலம், அவிநாசி, அறந்தாங்கி, கடலாடி, ஜெயங்கொண்டம், ஆண்டிபட்டி, சாத்தூர், கெங்கவல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
நாகையில் வாக்கு பெட்டிகளில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப்பெட்டிகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் திமுகவினர் முறையிட்டனர்.