நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கூடுகிறது.
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் நேற்று திடீரென்று தனி அணியாக சென்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுமாறு அவர்கள் கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, இன்றும் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் மாவட்ட ஆதரவு அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.  அப்போது தங்கள தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அ.தி.மு.க அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அணி அணியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கூடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

இதற்கிடையில் இன்று டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

முன்னதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2-ம் தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com