பேஸ்புக்கில் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் வாலிபர் கைது

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கோரி முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேஸ்புக்கில் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் வாலிபர் கைது
Published on

திருப்பூர்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு மூலம் கருணாநிதி உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது 35) என்ற வாலிபர் பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவு செய்திருந்தார். மேலும் அதில் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.

இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன் (58) என்பவர் திருப்பூர் தெற்கு போலீசில் கனகசுந்தரம் பரப்பிய அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து புகார் செய்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த கனகசுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com