டிக்-டாக் வீடியோவில் நடனமாடிய பெண் டிரைவர் ‘சஸ்பெண்டு’

மும்பையில் பஸ்சுக்குள் டிக்-டாக் வீடியோவில் பாடலுக்கு சீருடையில் நடனமாடிய பெண் பஸ் டிரைவரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
நடனமாடும் பெண் டிரைவர்
நடனமாடும் பெண் டிரைவர்
Published on

மும்பை:

நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் பஸ்சில் பெண் டிரைவராக பணியாற்றி வருபவர் யோகிதா மானே. இவர் தேஜஸ்வினி சிறப்பு பஸ்சை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் யோகிதா மானே பஸ்சுக்குள் டிக்-டாக் வீடியோவில் மகாராஷ்டிர பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ 18 வினாடிகள் ஓடுகிறது.

அவர் பணி நேரத்தில் டிக்-டாக் வீடியோவில் நடனமாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அன்னாசாகிப் மிஸ்சல் கூறியதாவது:-

யோகிதா மானே தோன்றும் வீடியோ பணி நேரத்தில் பஸ்சுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. அவர் பஸ் டிரைவர் சீருடையில் நடமாடுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறான செயலாக வெளிப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பஸ் டிரைவர் யோகிதா மானே கூறியதாவது:-

இந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. பணி இடைவேளை நேரத்தின்போது அங்குள்ள பெண் ஆட்டோ டிரைவரிடம் அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பேன். அவர்தான் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கூற முயன்றேன். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை. அவர்கள் முன்பு நான் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்.

நான் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஒரு விபத்தையும் ஏற்படுத்தவில்லை. எனது டிரைவர் பணி செயல்பாடுகள் சுத்தமாக இருக்கிறது. என்னால் நீண்ட நாட்களுக்கு வேலையில்லாமல் இருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com