

கோவை:
கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் மாலையில் நேரத்தில் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இதேபோல் புறநகர் பகுதிகளான துடியலூர், கவுண்டம் பாளையம், வடவள்ளி, இடையர்பாளையம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஒரு மணி நேரம் இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
குன்னத்தூர், கோவில்பாளையம், கரியம்பாளையம், பசூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் 10 நிமிடம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை சிலர் வீட்டின் முன் நின்று கைகளில் ஆலங்கட்டியை பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் மழையில் நனைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் நிலவி வருகிறது.