தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் தந்தை- மகன்கள் உள்பட 5 பேர் கைது

தூத்துக்குடி அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் தந்தை- மகன்கள் உள்பட 5 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி பகுதியை சேர்ந்த மீனவர் தொம்மை அந்தோணி (வயது 33). தொம்மை அந்தோணியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் தொம்மை அந்தோணி வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் கடந்த ஒரு ஆண்டாக பன்றிகளை பட்டி போட்டு அதில் அடைத்து வளர்த்து வருகிறார்.

தொம்மை அந்தோணிக்கு 4 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதித்து இறந்துவிட்டனர். தனது வீட்டின் பின்னால் மைக்கேல் சாமி பன்றிகள் வளர்த்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவி தனது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தொம்மை அந்தோணி கருதினார்.

இதனால் அவர் அந்த பட்டியை அகற்றுமாறு மைக்கேல் சாமியிடம் கூறி வந்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதின் காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த தொம்மை அந்தோணி, தனது வீட்டுக்கு பின்னால் இருந்த பன்றிகள் வளர்க்கப்பட்ட பட்டிக்கு தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த மைக்கேல் சாமி தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று தொம்மை அந்தோணியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அவர்கள் மீன் வெட்டும் கத்தியால் தொம்மை அந்தோணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொம்மை அந்தோணி கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை பிடிக்க விளாத்திகுளம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் மைக்கேல் சாமி, அவரது மகன்கள் நெப்போலியன் (24), ஜான்சன் (21), உறவினர் ஜெயராஜ் (36), அவரது அண்ணன் தனபால் (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com