தூத்துக்குடி மீனவர் கொலையில் 4 பேர் கைது

தூத்துக்குடி மீனவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder
கொலை செய்யப்பட்ட முருகேசன்
கொலை செய்யப்பட்ட முருகேசன்
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் முருகேசன்(வயது 41). மீனவரான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஸ்ரீநாத், ஜீவாநாத் என்ற மகன்களும் உள்ளனர். முருகேசனின் சித்தப்பா தங்கபாண்டி கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முள்ளக்காடு நேருஜிநகரை சேர்ந்த மாரிச்சாமி(44) என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் முருகேசன், பழிக்குப் பழியாக மாரிச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் முருகேசன் மாரிச்சாமியை கொலை செய்வதற்காக தசார பக்தர் போல வேடமணிந்தார். முள்ளக்காடு முனியசாமி நகரில் உள்ள கோவில் அருகே காணிக்கை வசூலிப்பது போல் வந்தார். அப்போது அந்த வழியே மாரிச்சாமி வந்தார். அவருக்கு முருகேசனை அடையாளம் தெரியாததால், அருகே வந்து நின்றார். அப்போது, முருகேசன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் மாரிச்சாமி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் சுதாரித்துக் கொண்டு, அவரிடம் இருந்து தப்பினார்.

பின்னர் அருகில் நின்று கொண்டு இருந்தவர்களுடன் இதுபற்றி கூறினார். இதையடுத்து அவர்களும், மாரிச்சாமியும் சேர்ந்து முருகேசனை கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முருகேசன் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மாரிசாமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசாமியை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட மூக்காண்டி(39), சரவணன், அந்தோணிராஜ் மற்றும் ஒருவரையும் போலீசார் கைது செய்தார்கள்.

கைதான மாரிச்சாமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், ‘‘பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டு முருகேசன் வந்தார். அவர் வேடமணிந் திருந்ததால் அதுபற்றி தெரியவில்லை. அவர் என்னை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனால் அவரிடமிருந்து தப்பிக்க நான் பதிலுக்கு அருகில் நின்றவர்களையும் அழைத்து கல்லால் தாக்கி கொலை செய்தேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com