பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது- திருநாவுக்கரசர்

பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியபோது எடுத்த படம்
நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியபோது எடுத்த படம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com