டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன: திருமாவளவன்

டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன என்று கதிராமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
கதிராமங்கலம் மக்கள் மத்தியில் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்
கதிராமங்கலம் மக்கள் மத்தியில் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்
Published on

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், அங்கு கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள், அங்கு உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று 28-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்களை மீத்தேன் திட்டத்தால் மத்திய-மாநில அரசுகள் சீரழித்து வருகின்றன.

கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக பல நாட்களாக போராடி வருகின்றனர். இந்த மண்ணின் மக்கள் வாழும் இடத்தை விட்டு வெளியேற முடியாது. ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும்.

பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்து 38 நாட்களாகி விட்ட பின்னரும், ஜாமீன் வழங்காமல் உள்ளனர். மண்ணுக்காக, மக்களுக்காக போராடியவர்களை சட்டத்தால் ஒடுக்கும் போக்கானது ஜனநாயகத்திற்கு புறம்பானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. தமிழக அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மாநில அரசின் உடன்பாடு இல்லாமல் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது. இந்த போராட்டம் வெற்றி பெறும் வரையில் கதிராமங்கலம் மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். நாகை, கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை தேர்வு செய்து அந்த பகுதியில் பெட்ரோலிய ரசாயன மண்டலத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

மாநில அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்த உள்ளது. இதற்காக இன்று நாகை மாவட்டத்தில் மாதாணம், பெருந்தோட்டம், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் ஆகிய இடங்களில் கிராம மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

சோழபுரம் அருகே மானம்பாடி கிராமத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நாகநாதசாமி கோவில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாக்க தவறியதோடு, புனரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com