திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு: விஷால் பேட்டி

திரையரங்குகள் வேலைநிறுத்தத்தால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு ஏதேனும் உதவுமாறு தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விஷால் வலியுறுத்தினார்.
திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு: விஷால் பேட்டி
Published on

தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்திற்கு பிறகு விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் பேசுகையில், ”கேளிக்கை வரியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதனால் 10 நாட்கள் பொறுத்து திரையரங்க உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தற்போது வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதால், கடந்த வெள்ளிக் கிழமை திரைக்கு வந்த படங்களில் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் 10 தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது உதவிகளை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்ய வேண்டும். நாளை தமிழக அரசு அறிவிக்கும் முடிவினை பொறுட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி, சினிமாத்துறை பிரச்சனைகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com