

புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்ய சலியா ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஊரடங்கு காலத்தில், 100 டன்னுக்கு மேற்பட்ட மருந்துகள், பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றை ஆஸ்பத்திரிகளுக்கும், இதர நுகர்வோருக்கும் தபால்துறை வினியோகித்துள்ளது.
சரக்கு விமானங்கள், தபால் வேன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.
மேலும், தபால்துறையில் உள்ள 2 லட்சம் தபால்காரர்கள், மத்திய அரசின் பல்வேறு சமூகநல திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் செலுத்தப்பட்ட பணத்தை பயனாளிகளுக்கு வீடு தேடிப்போய் வழங்கி உள்ளனர். இதன்படி, விதவைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல நூறு கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகங்களுடனும், தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கி உள்ளனர். மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தபால்களை வினியோகித்து உள்ளனர். நாடு முழுவதும் நடமாடும் அஞ்சலகங்கள் மூலம் அஞ்சலக சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.