

புதுடெல்லி:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் பாலியல் வன்முறை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவும், கையெழுத்து மோசடி தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மற்றொரு மனுவும் தாக்கல் செய்தனர். அதை ஏற்று சுப்ரீம் கோர்ட் சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
இதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கையெழுத்து மோசடி தொடர்பான மனு மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.