

சென்னை:
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
டிடிவி தினகரனுக்கு தெரியாமல் வீடியோ ஆதாரத்தை வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்; வீடியோவை வெளியிட்டிருக்கக்கூடாது என ஜெயக்குமார் கூறுவதை ஏற்க முடியாது. ஆட்சியாளர்கள் வீடியோவை கண்டு பயப்படுவது ஏன்..? இந்த வீடியோ மூலம் மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் இந்த வீடியோவுகும் சம்பந்தம் இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே ஒரு லட்சம் மக்கள் வந்தார்கள். அப்போதே நாங்கள் ஜெயித்துவிட்டோம். நாங்கள் தேர்தலுக்காக பணம் கொடுக்கவில்லை. அவர்கள் ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்துவிட்டார்கள்.
சுயேட்சை வேட்பாளரை எதிர்க்க பயந்து 150 கோடி ரூபாய் பணம் கொடுத்து அரசியல் செய்ய நினைத்தால் மக்கள் எப்படி நம்புவார்கள். இதில் இருந்தே அரசியல் ரீதியாக நாங்கள் ஜெயித்துவிட்டோம்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது பார்க்க முடியவில்லை. இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். மருத்துவமனையில் நன்றாகத்தான் இருந்திருக்கிறார் என்ற மனநிறைவு இப்போது வந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்களும் இதைப் பார்த்து உண்மை நிலையை புரிந்துகொண்டிருப்பார்கள். வீடியோ தொடர்பாக எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.