

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகக்தில் நீட் தேர்வை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக போராடி வந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் மத்திய பா.ஜ.க.வின் அசைவுக்கு ஏற்றபடி நீட் தேர்வை கொண்டு வந்து விட்டனர்.
தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் நீட் தேர்வை வேண்டாம் என்று கூறி வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அந்த தேர்வை நடத்த வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவர்கள் மனநிலையை பா.ஜ.க. மாற்றி விட்டனர்.
நியூட்ரினோ உள்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க மனு அளித்தோம். தற்போது எங்களது 18 தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகங்களும் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்களுக்கு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினையைகூட நிறைவேற்றி தர முடியவில்லை. அவசர வழக்கை இவ்வளவு நாள் காலம் தாழ்த்துவது வேதனையாக உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அவ்வாறு வராவிட்டால் நீதி இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படும். ஒரு வருடமாக இந்த வழக்கிக்கிற்காக நீதிமன்றத்தில் அலைந்து வருகிறோம்.
தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடாமல் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அப்போது மக்கள் யாருக்கு ஆதரவாக உள்ளனர் என தெரிந்துவிடும்.