

ஊட்டி:
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் தற்காலிக பஸ் டிரைவர் தனது நண்பரிடம் பஸ்சை ஓட்ட கொடுத்த காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
ஊட்டியில் இருந்து கிளன்மார்கன் கிராமத்துக்கு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஒட்டி செல்ல போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கி இருந்தனர்.
ஆனால் அந்த பஸ்சை அவர் ஓட்டாமல் தனது நண்பரும் சக பயணியுமான ஒருவருக்கு ஓட்ட வாய்ப்பு அளித்துள்ளார். நண்பரை பஸ்சை இயக்க சொல்லி அவர் அருகில் நின்று கொண்டு எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.
அப்போது பஸ்சில் 40 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் பீதியுடனே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சியும் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது-
கிளன்மார்கன் பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சை ஓட்டி சென்ற தற்காலிக டிரைவர் ஒரு பயணிக்கு பஸ்சை ஓட்ட சொல்லி கொடுத்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த பஸ்சை காட்வின் என்ற தற்காலிக டிரைவர் தான் எடுத்து சென்றார். அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. பணிக்கு வந்தால் தான் அதனை இயக்கியது யார்? என்ற விவரம் தெரியவரும்.
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது லைசென்சை ரத்து செய்வதற்கு ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதனை தற்காலிக டிரைவர் சந்திர சேகர் ஓட்டி சென்றார். இந்த பஸ் குமரன் சாலையில் இருந்து வளர்மதி சிக்னலுக்கு முந்தைய இடது புற சாலையில் திரும்பி காங்கயம் சாலை நோக்கி சென்றது.
யுனிவர்சல் தியேட்டர் வளையில் திரும்ப முயன்ற போது அங்குள்ள ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் வளைவில் திரும்பிய ஆட்டோ மீதும் பஸ் உரசியது.
இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து பஸ்சை மீட்டு சென்றனர். #tamilnews #busstrike