முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்: எம்.எல்.ஏ. வெற்றிவேல் பாய்ச்சல்

குற்றச்சாட்டுகளை அவர்கள் தான் தொடங்கினார்கள் அதனால் முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்: எம்.எல்.ஏ. வெற்றிவேல் பாய்ச்சல்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை வளாகத்திற்கு வெளியே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை)அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ”ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் படத்தை போட்டோ பெயரை சொல்லியோ யாரும் ஓட்டு கேட்கவில்லை. அப்போது அங்கு மாவட்ட செயலாளராக வெற்றிவேல்தான் இருந்தார். அப்போது அவர் என்ன செய்தார்? இப்போது அவர் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை” என்று கூறினர்.

அதேபோல், “ஆர்.கே. நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. பொதுச் செயலாளர் சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினரை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்” என்றும் தெரிவித்தனர். 

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு எம்.எல்.ஏ. வெற்றிவேல் பதிலளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெற்றி வேல், ”அதிமுக உட்கட்சி விவகாரங்களை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் தான் தொடங்கினார்கள், அவர்கள் தான் நிறுத்த வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர்,  துணை பொதுச்செயலாளர் குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தான் வலியுறுத்தினேன்.

ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளரின் படங்களை கொண்ட பிரசுரங்களை அடித்தோம். அதற்கான சான்றுகள் தேர்தல் ஆணையத்திலும் உண்டு. நமது விரோதிகள் சிலர் போஸ்டர்களில் உள்ள அவர்களது படங்களை கிளித்தனர். அதனால் தான் பிரச்சனை வந்தது” என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு முதல்வர் பழனிச்சாமி தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வெற்றிவேல் வலியுறுத்தினார்.

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை சந்திப்பின் வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தினகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com