பணிநீக்க நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் மேல்முறையீடு- உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. #Highcourt
பணிநீக்க நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் மேல்முறையீடு- உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை
Published on

சென்னை:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத தங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60 ஆயிரம் பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் பல கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர்.

எனவே, மனுதாரர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், ஆசிரியராக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆசிரியர்கள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று முறைதான் இதுவரை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற அரசாணை தமிழகத்தில் மட்டும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தனர்.

மேலும், ‘மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்று தனி நீதிபதி தவறான கருத்தை கூறியுள்ளார். அது தேசிய தகுதித் தேர்வு ஆகும். தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதித் தேர்வை எழுத முடியாது.

தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளதே தவிர, எப்போது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்றும் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com