கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி மற்றும் மத ரீதியான செய்திகளை தவறாக பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் கலெக்டர்
தஞ்சாவூர் கலெக்டர்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து சமுதாய பிரதிநிதிகளுடன் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 479 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 39 ஆயிரத்து 362 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பி வந்தோர் மற்றும் வெளி மாநிங்களில் இருந்து திரும்பிய 447 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 1964 வெளிமாநில தொழிலாளர்கள், 24 சுற்றுலா பயணிகளுக்கு 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, இருப்பிட வசதி, மருத்துவ வசதி அளிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 250 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 150 பேருக்கு பரிசோதனை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ரத்த மாதிரி, சளி, பரிசோதனைக்காக திருவாரூக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி மற்றும் மத ரீதியான செய்திகளை தவறாக பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com