

சுங்கக் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் தேர்தல் நடந்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி உயர்த்தப்படும் வழக்கம் இருப்பதால், இன்று நள்ளிரவு மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கட்டண உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. வந்தால் சுமார் ரூ.5 கட்டண உயர்வு இருக்கும்' என்றனர்.