விஜய் கட்சி மாநாட்டுக்காக 6 நகரங்களில் இடம் பார்க்கிறார்கள்

அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் கட்சி மாநாட்டுக்காக 6 நகரங்களில் இடம் பார்க்கிறார்கள்
Published on

சென்னை:

வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்.

புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்பு கட்சி வளர்ச்சி திட்டங்கள் என ஒவ்வொன்றையும் கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநாடு நடத்துவற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் விஜய் ஆலோசனையின் பேரில் புஸ்ஸி ஆனந்த் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

முதல் மாநாடு என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.

வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக பயனாளிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

மாநாடு, பிறந்தநாள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு, விஜய் பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குமார பாளையம் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் செலவில் கல்வி உதவித்தொகை தலா ரூ.3000 வீதம் 9 பேர்களுக்கும், ரூ.2000 வீதம் 6 நபர்களுக்கும் சில்வர்குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 பேருக்கு சீருடை, 300 பேருக்கு அரிசி, 350 பெண்களுக்கு புடவை மற்றும் முதியோர் உதவித் தொகை, தையல் எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

இன்று காலை ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலை கரூரிலும், தொடர்ந்து சேலத்திலும், நாளை கோயம்புத்தூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுவரை 5 நாட்களில் 27 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடி வடைந்து

உள்ளது. அனைத்து ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அடுத்தடுத்து அதிரடியாக விஜய் எடுத்து வரும் பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் தேதி, இடம் விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com