காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரும் தமிழக அரசு

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரும் தமிழக அரசு
Published on

சென்னை:

தமிழ்நாட்டுக்கு காவிரியில் மாதம் தோறும் திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க மறுத்து வருகிறது.

சமீபத்தில் காவிரி நதி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் கூடி தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதையும் ஏற்க கர்நாடகா அரசு மறுத்து விட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நேற்று சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com