கனமழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது- மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பத்தினர்

சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கனமழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது- மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பத்தினர்
Published on

அறந்தாங்கி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com